'நிலத்தை பொறுத்தவரை எல்லைகள் மாறலாம்; அதேபோல சிந்து மீண்டும் இந்தியாவுக்கு சொந்தமாகலாம்'; ராஜ்நாத் சிங் பேச்சு..!
Rajnath Singh says Sindh can belong to India again
'இந்தியா முழுவதும் உள்ள ஹிந்துக்கள் சிந்து நதியை புனிதமாக கருதினர். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாகரீக ரீதியாக எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்.' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது:
பல ஆண்டுகளாக நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடு எரிக்கப்பட்டது. குழந்தைகள் கொல்லப்பட்டதோடு, மகள்களுக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகினர். மேலும் மக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில், அங்கிருந்து சிலர் எப்படியோ தப்பித்து, இந்தியாவுக்கு வந்துவிட்டனர். ஆனால், திருப்திபடுத்தும் அரசால், அவர்களுக்கு போதுமான சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட சமூகத்தின் ஓட்டு வங்கியை திருப்திபடுத்துவதற்காக அவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர் என்றும் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளில் இருந்து வரும் ஒரு சிறப்பு வகுப்பினருக்கு அடைக்கலாம் வழங்கப்பட்டது. உண்மையிலேயே அதற்கு தகுதியான ஹிந்து சமூக மக்களுக்கு அவர்களுக்கு தகுதியான உரிமைகள் வழங்கப்படவில்லை என்று கூறியதோடு, அவர்களின் துன்பங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் பேசியுள்ளார். ஆனால், அந்த வலியை யாராவது புரிந்து கொண்டனர் என்றால், அது பிரதமர் மோடி தான். அதனால் தான் குடியரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங் கூறுகையில்; பாஜ மூத்த தலைவர் அத்வானியை பற்றி குறிப்பிட விரும்புகிறேன் என்று தெரிவித்து, சிந்து பகுதியைச் சேர்ந்த ஹிந்துக்கள், குறிப்பாக அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து சிந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என அத்வானி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சிந்துவில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் உள்ள ஹிந்துக்கள் சிந்து நதியை புனிதமாக கருதினர். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாகரீக ரீதியாக எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிலத்தை பொறுத்தவரை எல்லைகள் மாறலாம். யாருக்கு தெரியும், சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்றும், சிந்து நதியை புனிதமாக கருதும் சிந்து மக்கள் எப்போதும் நம்முடையவர்களாக இருப்பார்கள் என்றும், அவர்கள் எங்கிருந்தாலும் நம்முடையவர்களாக இருப்பார்கள் என்றும் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
English Summary
Rajnath Singh says Sindh can belong to India again