புதுச்சேரி வாலிபரை ஒரே நாளில் பணக்காரர் ஆக்கிய கேரளா லாட்டரி.!
puthuchery youth won 20 crores kerala lottary
நமது அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி குலுக்கல் மிக அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. அதில், ஒரு சீட்டின் விலை ரூ.400 என்று மொத்தம் 45 லட்சம் சீட்டுகள் விற்பனையாகி இருந்தன.
இந்த குலுக்கலில் முதல் பரிசு ரூ.20 கோடி எக்ஸ் சி 224091 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு கிடைத்து இருந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், இந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு பாலக்காட்டில் மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்து திருவனந்தபுரத்தில் உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் முதல் பரிசு பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் சபரிமலைக்கு வந்த புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான பக்தர் தரிசனத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வந்தபோது இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தனது நண்பர்களுடன் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு வந்த அந்த வாலிபர் முதல் பரிசு கிடைத்த அந்த லாட்டரி சீட்டை அலுவலகத்தில் ஒப்படைத்து சான்றிதழ் பெற்றுக் கொண்டார். ரூ.20 கோடி பரிசு தொகையில், வரி நீங்கலாக மீதம் ரூ.12.60 கோடியை அய்யப்ப பக்தர் பெற்று கொண்டார்.
English Summary
puthuchery youth won 20 crores kerala lottary