பேப்பர் தாள் நோட்டுகளுக்கு டாடா; விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்; ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுவது என்ன..?
Plastic Rupee Notes to be Introduced Soon in India
இந்திய ரூபாயின் வெளியீடு, விநியோகம் மற்றும் பணப்புழக்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி கவனித்து வருவதோடு, நாட்டின் பண பரிவர்த்தனை முறைகளையும் நிர்வகித்து வரும் முக்கிய அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, ரிசர்வ் வங்கிக்கு உட்பட்டே பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2012-ஆம் ஆண் பிளாஸ்டிக் ரூபாய் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்னெடுத்தது. எனினும் அப்போது எதிர்கொள்ளப்பட்ட சில தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள், சவால்கள் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், சுமார், 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பாலிமரால் ஆன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதாவது, நாட்டில் ரூபாய் நோட்டுகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், பிளாஸ்டிக்கின் நீடித்து உழைக்கும் தன்மையைப் பயன்படுத்திக் கொள்வதற்கும், மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்று 'பிசினஸ் ஸ்டாண்டர்ட்' என்ற செய்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கியமாக குறைந்த உற்பத்திச் செலவுகள் மற்றும் கள்ள நோட்டுகளின் குறைப்பு ஆகியவை இந்த மாற்றத்திற்கான மற்ற காரணங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக ரூபாய் நோட்டுகள் பேப்பர் காகிதங்களில் அச்சடிக்கப்படுவதால், அவை விரைவாகவே கிழிந்து விடுகின்றன. இதனை மீண்டும் புதிதாக அச்சடிப்பதற்காக ரிசர்வ் வங்கிக்கு அதிகமாக பணம் செலவிடப்படுகிறது.

காகித ரூபாய் நோட்டுகளை விடவும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக தயாராவுள்ள பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை கையாளுவதற்கு ஏதுவாக ஏடிஎம் இயந்திரங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, கனடா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அமெரிக்காவில் பருத்தி மற்றும் லினன் கலந்து டாலர்கள் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Plastic Rupee Notes to be Introduced Soon in India