என்டிஏ கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய சென்னை வரும் பியூஷ் கோயல்..!
Piyush Goyal to come to Chennai to decide on seat sharing of NDA alliance
தமிழக சட்டசபை தேர்தல் வெகு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணியை முடித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
அதிமுக - பாஜக கூட்டணி ஓராண்டுக்கு முன்பே கூட்டணி அமைத்துள்ளது. இருப்பினும் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கு, பாஜக அதிக தொகுதிகளை கேட்டு அதிமுகவுக்கு அழுத்தம் கொடுப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, 50 முதல் 60 தொகுதிகள் வரை கேட்பதாக வரும் தகவல்கள் அதிமுகவினர் மத்தியில் பாஜக மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் சில நாட்கள் முகாமிட்டு கூட்டணி தொடர்பான பணிகளை தீவிரப்படுத்தினார். இதை தொடர்ந்து பாமக மற்றும் அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. அதற்கு பிறகு முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், பாஜகவுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்யவும் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இந்தா சூழலில், மீண்டும் வரும் 26-ஆம் தேதி தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வரவுள்ளார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அத்துடன், மார்ச் 01ந்தேதி பிரதமர் மோடி மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வருகிறார். அதற்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் ஏற்ற பாஜக தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கவே ஒன்றிய அமைச்சரும், பாஜக தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Piyush Goyal to come to Chennai to decide on seat sharing of NDA alliance