கர்நாடகா: காட்டு யானை தாக்கி பெண் பலி.! ஆத்திரமடைந்த கிராம மக்கள் எம்.எல்.ஏ மீது தாக்குதல்.!
MLA attacked by angry villagers after the woman died attacked by an elephant in Karnataka
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் ஹுல்மனே குந்தூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சதீஷ். இவரது மனைவி ஷோபா(40). இவர்கள் இரண்டு பேரும் நேற்று காலை வனப்பகுதியை ஒட்டி உள்ள தங்கள் தோட்டத்தில் மாடுகளுக்கு புல் அறுக்க சென்றனர்.
அப்பொழுது அங்கு புல் அறுத்துக் கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இதை பார்த்து இவர்கள் இரண்டு பேரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால் யானை துரத்தியதில் ஷோபா யானையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டார்.
இதில் ஷோபாவை யானை தூக்கி வீசி, காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இறந்தவர்கள் ஓடிவந்து காட்டு யானையை விரட்டி அடித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், கடந்த சில மாதங்களாக காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதாகவும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் உயிரிழந்த ஷோபாவின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், முடிகெரே தொகுதி பாஜக எம்.எல்.ஏ குமாரசாமி, ஹுல்மனே கிராமத்தை பார்வையிட சென்றார். அப்போது யானை தாக்கி பெண் உயிரிழந்தது தொடர்பாக எம்.எல்.ஏ சரியான பதிலளிக்கவில்லை என கூறி கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்கினர்.
மேலும் அவரை விரட்டி விரட்டி தாக்கிய அவரின் சட்டையை கிழித்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களின் பிடியிலிருந்து எம்.எல்.ஏ குமாரசாமியை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
MLA attacked by angry villagers after the woman died attacked by an elephant in Karnataka