கருணை மனு விவகாரம்: குடியரசு தலைவரின் உத்தரவில் உயர்நீதிமன்றம் தலையிட மறுப்பு
Mercy Petition Case High Court Refusal to Interfere with President Order
சென்னை: மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய குடியரசுத் தலைவர் உத்தரவிற்கு பிறகு, அதே விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கொலை வழக்கில் குற்றவாளி ராதாகிருஷ்ணனுக்கு, நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை, உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. பின்னர், ராதாகிருஷ்ணன் அளித்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் பரிசீலித்து, மரண தண்டனையை சாகும் வரை சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக ஆளுநரிடம் மனு அளித்த ராதாகிருஷ்ணன், அந்த மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கின் போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ்,"குடியரசுத் தலைவர் ஏற்கெனவே முடிவெடுத்துள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் விரும்பினால், மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகலாம்" என்று வாதிட்டார்.
அதனை ஏற்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு,"குடியரசுத் தலைவர் உத்தரவிற்கு பிறகு, ஆளுநர் அல்லது நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது" என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பால், ராதாகிருஷ்ணனின் முன்கூட்டிய விடுதலை முயற்சி தடைபெற்றுள்ளது.
English Summary
Mercy Petition Case High Court Refusal to Interfere with President Order