டெல்லியில் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு: 2030-ஆம் ஆண்டுக்குள் இருநாட்டு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு..!
Meeting between PM Modi and Russian President Putin in Delhi
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்கவுள்ளது. இதில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் 11 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள். மேலும், பார்வையாளர்களாக சுமார் 10 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் இந்த மாநாடு நிறைவடைய உள்ளது.
புதுடெல்லி வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி அதிபர் புதினுக்கு பரிசளித்துள்ளார்.
இந்தியா - ரஷ்யா இருதரப்பு வர்த்தகம் தற்போது 60 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இதை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.

இதை கருத்தில் கொண்டு, அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்வார்கள் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தொழில்துறை கண்காட்சியான INNOPROM India 2026-இல் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுடன், ரஷ்ய தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் அன்டன் அலிகானோ பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், இரு தரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்த அடுத்த 04 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலரைச் சேர்க்க வேண்டும் என்றும், இதற்கு ஆண்டுதோறும் இரட்டை இலக்க வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரயில் மற்றும் சுரங்கப்பாதை துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, எஃகு மதிப்புச் சங்கிலியை மேம்படுத்துவது, இருதரப்பு வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வது குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து முன்னதாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது;
''நாளை தொடங்க உள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் புதுடெல்லியில் கூடுகிறார்கள். உலக நலனை முதன்மை நோக்கமாகக் கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள விவாதங்கள் இந்த மாநாட்டில் நடைபெறும்.'' ன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
English Summary
Meeting between PM Modi and Russian President Putin in Delhi