கேரளாவில் பரபரப்பு; பினராயி வீட்டில் சோதனையிட்ட அமலாக்கத் துறையினரின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர்..!
Marxist Party members attack vehicles of Enforcement Directorate officials who conducted a raid at Pinarayis residence
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையை முடித்து பினராயி விஜயனின் திருவனந்தபுரம் வீட்டிலிருந்து வெளியேறிய அமலாக்கத் துறை அதிகாரிகள் கார் மீது, கற்களை வீசி, மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
அதாவது, கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) என்ற கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றது, பண மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ என்ற ஐடி நிறுவனத்துக்கு நேரடி தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன் வைத்த நிலையில், அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது.

சோதனையை முடித்து திரும்பிய அமலாக்கத் துறை வாகனத்தை சூழ்ந்துக்கொண்ட மார்க்சிஸ்ட் தொண்டர்கள் காரின் மீது செங்கல், இரும்புக் கம்பிகள் கொண்டு தாக்குதல் நடத்தினர். அப்போது அந்த காரினுள் ஒரு பெண் அதிகாரி உள்பட 04 அதிகாரிகள் இருந்தனர். அதைப் பொருட்படுத்தாமல் சிபிஎம் தொண்டர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடவே வந்த சிஆர்பிஎஃப் பாதுகாவலர்களின் வாகனங்களையும் தாக்கியதில், வாகனத்தின் ஓட்டுநர் காயமடைந்துள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் தீவிரமடையவே, காவல் துறையும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
காலையில் சோதனை தொடங்கியபோது பினராயி விஜயன் குடும்பத்துடன் வீட்டில் தான் இருந்தார். அவரது வீடு உள்பட 10 இடங்களில் சோதனை நடந்தது. அதில் அவரது கண்ணூர் பூர்வீக இல்லம், கோழிக்கோட்டில் உள்ள மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் இல்லம் அடங்கும்.
English Summary
Marxist Party members attack vehicles of Enforcement Directorate officials who conducted a raid at Pinarayis residence