மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆரை தடுத்திருந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகியிருக்கும்; மம்தா பானர்ஜி பேச்சு..!
Mamata Banerjee says Presidents rule would have been imposed if SIR had been stopped at West Bengal
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அமல்படுத்தாமல் இருந்திருந்தால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் எஸ்ஐஆர் பணிகளை கடுமையாக எதிர்த்தவர் மம்தா பானர்ஜி. எனினும், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எதிர்ப்பைக் கைவிட்டுள்ளார்.
இந்நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ''எஸ்ஐஆர் அமல்படுத்தப்படாமல் இருந்து இருந்தால், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கும். வாக்களிப்பு இல்லாமல் இதைச் செய்திருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமித் ஷாவின் தந்திரம் உங்களுக்குப் புரிகிறதா? என்றும், நாங்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை என்றும், நாங்கள் அதைச் செய்வோம், போராடுவோம், வெற்றி பெறுவோம். எஸ்ஐஆர் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். நீங்கள் உங்கள் ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்கத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அத்துடன், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும், அதிர்ஷ்டவசமாக தான மேற்கு வங்கத்தின் பிர்பும்மில் பிறந்தேன். இல்லாவிட்டால், என்னையும் அவர்கள் வங்கதேசத்தவர் எனக் கூறி இருப்பார்கள் என்று தெரிவிதித்துள்ளார்.
மேலும், என்ஆர்சி-யை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும், அவர்கள் தனது கழுத்தை அறுத்தாலும், இங்கே எந்த தடுப்பு முகாமையும் உருவாக்க விடமாட்டேன். யாரையும் வெளியேற்றவும் மாட்டேன் என்றும் சூளுரைத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 06-ஆம் தேதி மத நல்லிணக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதில், அனைத்து மத மக்களும் பங்கேற்கிறார்கள். பெரும்பான்மையினர், சிறுபான்மையினரைப் பாதுகாப்பார்கள். அதுதான் விதி. வங்கம் அனைத்து மதங்களையும் மதிக்கிறது. அதேநேரத்தில், அது வகுப்புவாத சக்திகளை ஏற்றுக்கொள்ளாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும் என அறிவித்திருந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹூமாயுன் கபிர், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதை சுட்டிக்காட்டிப் பேசிய மம்தா பானர்ஜி, ஒவ்வொரு மதத்திலும் துரோகிகள் இருக்கிறார்கள். சில துரோகிகள், பாஜகவின் பணத்தைப் பயன்படுத்தி வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டுகிறார்கள். கலவர அரசியலை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Mamata Banerjee says Presidents rule would have been imposed if SIR had been stopped at West Bengal