பரபரப்பை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்.!
lorry drivers protest temporarliy called off
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா உள்ளிட்ட மூன்று புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒப்புதல் அளித்ததனைத்தொடர்ந்து, அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த சட்டங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில் வாகன விபத்து தொடர்பான திருத்தச்சட்டமும் இடம்பெற்றுள்ளது.
அந்த சட்டத்தில், சாலை விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி, டிரக், பேருந்து ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
புதிய தண்டனைச் சட்டத்தில் உள்ள இந்த விதிக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் லாரி ஓட்டுனர்கள் 'ரஸ்தா ரோகோ' என்ற பெயரில் போராட்டங்களை நடத்தினர். நாடுமுழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.
இந்த நிலையில், லாரி ஓட்டுனர்கள் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு மற்றும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அனைத்து ஓட்டுநர்களையும் அவர்களின் பணிகளுக்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
English Summary
lorry drivers protest temporarliy called off