திரிணமுல் எம்பி மஹ்வா மொய்த்ரா - கல்யாண் பானர்ஜி இடையே வெடித்த மோதல்: பதவியை ராஜினாமா செய்துள்ள லோக்சபா கொறடா..!
Kalyan Banerjee resigns as party whip after clash with Trinamool MP Mahua Moitra
திரிணமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, கட்சியின் கொறடா பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். சக எம்பியான மஹூவா மெய்த்ராவுடன் மோதல் காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் கல்யாண் பானர்ஜி, இவர் 4 முறை ஸ்ரீராம்பூரிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சக எம்பியான மஹூவா மொய்த்ராவுடன் கருத்து மோதல் ஏற்பட்ட்டுள்ளது. இதன் காரணமாக சக எம்பிக்களுடன் சரியான ஒத்துழைப்பு இல்லை என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இன்று கட்சியின் கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

சக எம்பியான மஹூவா மொய்த்ரா சமீபத்தில் கூறிய தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் நாகரீகமற்ற மொழியை பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது.
தனிப்பட்ட நடத்தை பற்றிய கேள்விகளை ஒவ்வொரு பொது நபரும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். என்னைப்பார்த்து பாலியல் ரீதியாக விரக்தியடைந்தவர்' என்று முத்திரை குத்துவது துணிச்சல் அல்ல, அது வெளிப்படையான அத்துமீறல் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒரு பெண்ணை நோக்கி இதுபோன்ற வார்த்தைகள் பேசப்பட்டால், நாடு தழுவிய அளவில் சீற்றம் ஏற்படும் என்றும், அது சரியானதுதான். ஆனால், அத்தகைய வார்த்தைகளுக்கு ஒரு ஆண் இலக்காக இருக்கும்போது, அது நிராகரிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் மஹ்வா மொய்த்ரா தனது சொந்த தோல்விகளை மறைத்துக்கொள்ளலாம். ஆனால், அவர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார் என்று கல்யாண் பானர்ஜி பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே மஹ்வா மொய்த்ரா மற்றும் கல்யாண் இடையே மோதல் நீடித்து வருகிறது. பல முறை இருவரும் நேருக்கு நேர் பாராளுமன்ற வளாகத்தில் மோதிக் கொண்டுள்ளனர். நேற்று மம்தாபானர்ஜி பஞ்சாயத்து பேசியும் இருவருக்கும் இடையில் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று இது குறித்து மம்தா விசாரணை நடத்தியுள்ளார். அதன் பின்னர் கல்யாண் பானர்ஜி தனது கொறடா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பதிவிட்டுள்ளதாவது: ''லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளின் எம்.பி.க்களுடன் இன்று ஒரு மெய்நிகர் சந்திப்பை நான் கூட்டினேன். திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர் ஸ்ரீ சுதிப் பந்தோபாத்யாய் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால், சுதிப் தா நல்ல உடல்நலம் பெறும் வரை லோக்சபாவில் கட்சியைத் தலைமை தாங்கும் பொறுப்பை ஸ்ரீ அபிஷேக் பானர்ஜியிடம் ஒப்படைக்க எம்.பி.க்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.''என்று மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.
English Summary
Kalyan Banerjee resigns as party whip after clash with Trinamool MP Mahua Moitra