"₹1 கோடி கஞ்சாவை எலிகள் அழித்துவிட்டன": போலீஸின் வினோத பதிலால் குற்றவாளி விடுதலை!
Jharkhand police ganja case court
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் வழக்கு ஒன்றில், காவல் துறையினர் அளித்த விளக்கம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வழக்கின் பின்னணி:
கடந்த 2022-ஆம் ஆண்டு ஓர்மஞ்சி போலீஸார் நடத்திய சோதனையில், ₹1 கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பிகாரைச் சேர்ந்த இந்திரஜித் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போலீஸார் சமர்ப்பித்த சாட்சியங்களில் நேரமும் இடமும் குறித்த பெரும் குளறுபடிகள் இருந்தன.
எலிகள் செய்த 'வேலை':
நீதிமன்றத்தில் ஆதாரமாக ஒப்படைக்க வேண்டிய 200 கிலோ கஞ்சா எங்கே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த போலீஸார், "காவல் நிலையக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா முழுவதையும் எலிகள் தின்று அழித்துவிட்டன" எனக் கூறி நீதிமன்றத்தையே அதிர வைத்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பு:
முக்கிய ஆதாரமான கஞ்சா சமர்ப்பிக்கப்படாததாலும், விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லாததாலும் இந்திரஜித் ராய் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.
தொடரும் 'எலி' அட்டகாசம்:
ஜார்க்கண்டில் இது போன்ற வினோதக் காரணங்கள் புதிதல்ல. கடந்த ஜூலை மாதம் தன்பாத் நகரில் அரசு கிடங்கில் இருந்த மதுபானங்களை எலிகள் குடித்துவிட்டதாக அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது. அரசுப் பாதுகாப்பில் இருக்கும் விலை உயர்ந்த போதைப்பொருட்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்துப் தற்போது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
English Summary
Jharkhand police ganja case court