சர்வதேச நெருக்கடி...எகிறும் கச்சா எண்ணெய் விலை...! - இந்தியாவில் பெட்ரோல் விலை ஏன் உயரவில்லை...? இது எப்படி சாத்தியமானது...?
International crisis rising crude oil prices Why havent petrol prices increased India How this possible
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பு காரணமாக, உலகம் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அதிர்வுகள் பல நாடுகளின் பொருளாதாரத்தை சிக்கலில் தள்ளியுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து திடீரென 126 டாலர் வரை உயர்ந்திருப்பது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதன் விளைவாக பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகி, அரசுகள் அவசரகால கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால் பொதுமக்கள் கடும் சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.ஆனால் இந்த சர்வதேச குழப்பங்களின் மத்தியில் கூட, இந்தியா எரிபொருள் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் பேசியபோது, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஒரு பேரல் எண்ணெயின் மதிப்பு சுமார் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.11 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், எல்.பி.ஜி. எரிவாயு விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இழப்புகளை சந்தித்தபோதிலும், கலால் வரி குறைப்பு, எல்.பி.ஜி. உற்பத்தி அதிகரிப்பு, குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகளை ஊக்குவித்தல் மற்றும் தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களை பாதுகாக்க இந்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.200 வரை உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் டெல்லி சந்தை மதிப்பின் அடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95 அளவிலேயே விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
மேலும், நாட்டின் எந்தப் பகுதியிலும் எல்.பி.ஜி. விநியோக தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மத்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
International crisis rising crude oil prices Why havent petrol prices increased India How this possible