இயற்கையின் சீற்றம்...! அருணாச்சலப் பிரதேசத்தை உலுக்கும் பெருமழை...! - நிலச்சரிவில் சிக்கி 3 பேர் நிலை என்ன...?
Heavy rains lash Arunachal Pradesh What condition 3 people trapped landslide
அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் அதிதீவிர கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பயங்கர நிலச்சரிவுகளும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, பல இடங்களில் போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது.குறிப்பாக கேயி பன்யோர் மாவட்டத்தில் பெய்த இடைவிடாத கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.யாசாலி பகுதியில் உள்ள நீப்கோ நீர்மின் திட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த தடுப்புச்சுவர், வெள்ளநீரின் கடும் அழுத்தத்தை தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது.
இதன் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, தாழ்வான பகுதிகளில் அமைந்திருந்த சுமார் 18 வீடுகளை கடுமையாக சேதப்படுத்தியது.இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 3 பேர் மாயமானதாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் தனி சூலு தெரிவித்துள்ளார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் துணை ஆணையர், துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.மாநில பேரிடர் மீட்புப் படை ஏற்கனவே களத்தில் இறங்கி பணிகளை தொடங்கியுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் அவசர உதவிக்காக சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர்.
மீட்புப் பணிகளுக்கு துணைநிற்க முன்னாள் ராணுவ வீரர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரங்கநதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அங்குள்ள நீர்மின் திட்டத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.பொடின் மற்றும் ஹோஜ் பகுதிகளுக்கு இடையிலான சாலைகளில் டன் கணக்கில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால், நூற்றுக்கணக்கான பயணிகள் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர்.
சாலைகளை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில், ஆற்றுப்படுகைகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Heavy rains lash Arunachal Pradesh What condition 3 people trapped landslide