பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! ஜி.கே.வாசன் கோரிக்கை.!
GKVasan statement on Petrol price
எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
மத்திய அரசு நாட்டு மக்களின் தற்போதைய பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு எரிபொருள் விலை உயராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக தற்போது உயர்த்தப்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வை திரும்பப்பெறவும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
சந்தை விலைக்கேற்ப எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை ஆகியவற்றை கச்சா எண்ணெயின் சந்தை விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும் மக்களின் பொருளாதார சுமையை கவனத்தில் கொண்டு உடனடியாக எண்ணெய் நிறுவனங்களிடம் பேசி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தாமல் இருக்க வலியுறுத்த வேண்டும்.
கடந்த நான்கரை மாதங்களுக்கு பிறகு இப்போது வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளதால் சாதாரண ஏழை, நடுத்தர குடும்பம் தான் பெரிதும் சிரமப்படும்.
கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி முதல் 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 102.16 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 77 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 92.65 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா கால பாதிப்பில் இருக்கின்ற மக்களுக்கு இந்த விலையேற்றம் பொருளாதாரத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
எனவே மத்திய அரசு, பொது மக்களின் நலனை கவனத்தில் கொண்டு எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாமல் இருக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
English Summary
GKVasan statement on Petrol price