இது தேர்தல் கொடுத்த பரிசு...! 3 மாதங்களில் 81% உயர்ந்த சிலிண்டர் விலை..! - மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி
election gift Cylinder prices increased by 81percentage 3 months Rahul Gandhi blasts central government
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத் தாழ்வுகள் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளில் மறுசீரமைப்பு செய்யப்படும் நடைமுறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், மாதத்தின் முதல் நாளான இன்று நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் விலையில் கணிசமான உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, சென்னையில் 19 கிலோ எடையுடைய வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டு, ரூ.3,237 என்ற உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இதேபோன்று, நாடு முழுவதும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையும் ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் விலை உயர்வு, சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நேரடியாக பாதிக்கப்படுவதுடன், அதன் தாக்கம் பொதுமக்களின் அன்றாட உணவுப் பொருட்களின் விலையிலும் பிரதிபலிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த மூன்று மாதங்களில் வணிக எரிவாயு விலை 81 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “தேர்தலுக்கு பின்னரே பணவீக்கம் தீவிரமாகும் என நான் முன்பே எச்சரித்திருந்தேன்.
தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில், ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.993 வரை வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை மொத்தம் ரூ.1,380 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. வெறும் மூன்று மாதங்களில் 81 சதவீத உயர்வு என்பது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் அளவுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “தேநீர் கடை, தாபா, ஓட்டல்கள், இனிப்பு கடைகள் போன்ற பல்வேறு துறைகள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதன் தாக்கம் பொதுமக்களின் அன்றாட உணவுப் பொருட்களின் கிடைப்பிலும் விலையிலும் பிரதிபலிக்கும்.
இப்போது எரிவாயு விலை உயர்வு; அடுத்த கட்டமாக பெட்ரோல், டீசல் விலைகளும் உயர வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
election gift Cylinder prices increased by 81percentage 3 months Rahul Gandhi blasts central government