டெல்லி கார் வெடிப்பு சதி: ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதலுக்குத் திட்டம் – என்ஐஏ அதிர்ச்சி தகவல்!
Delhi Red Fort blast terrorists planned Hamas style drone attacks
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு முன்னதாக, பயங்கரவாதிகள் ஹமாஸ் பாணியில் ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தரப்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கார் வெடிப்புத் தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.
இது ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என என்ஐஏ உறுதிப்படுத்தியுள்ள நிலையில், விசாரணையில் புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள்: தாக்குதலுக்குக் காரை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் உன்-நபிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் அமீர் ரஷீத் அலி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஜசிர் பிலால் வானி என்பவரை என்ஐஏ நேற்று முன்தினம் இரவு கைது செய்தது.
தொழில்நுட்ப உதவி: கைது செய்யப்பட்ட ஜசிர் பிலால் வானி, ட்ரோன்களை இயக்குதல் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பதில் திறன் பெற்றவர் என்றும், தொழில்நுட்ப ரீதியாகக் கார் வெடிப்புச் சம்பவத்துக்கு உதவியதாகவும் தெரியவந்துள்ளது. பயங்கரவாத சதித்திட்டங்களுக்கு உதவும் வகையில் ட்ரோன்களைச் சரிபார்த்தல், ராக்கெட்டுகளை வடிவமைத்தல் போன்ற பணிகளை ஜசிர் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் திட்டம் முறியடிப்பு:
மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டதாகவும், அந்தத் திட்டங்கள் தோல்வியடைந்த பின்னரே கார் குண்டு வெடிப்பைச் செயல்படுத்த முடிவு செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணைக்காக ஜசிர் வானியையும் அவரது சித்தப்பா நசீர் அகமது வானியையும் என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றபோது, ஜசிரின் தந்தை பிலால் அகமது தீக்குளித்துச் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Delhi Red Fort blast terrorists planned Hamas style drone attacks