பிறவியிலேயே கொரோனா, இரத்த நச்சுத்தன்மை பாதிப்பு... மருத்துவர்கள் செய்த சிகிச்சை...கொல்கத்தாவில் ஒரு மருத்துவ அதிசயம்...!
Corona blood poisoning birth treatment performed by doctors medical miracle Kolkat
கொரோனா தொற்றுடன் பிறந்ததோடு, கடுமையான இரத்த நச்சுத்தன்மை பாதிப்பும் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பச்சிளம் பெண் குழந்தையை, மருத்துவர்களின் தொடர் தீவிர சிகிச்சை மூலம் காப்பாற்றிய சம்பவம் மருத்துவ உலகில் கவனம் பெற்றுள்ளது.மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தையின் தாய்க்கு கொரோனா தொற்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பிறந்த உடனேயே குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.பொதுவாக புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவது அரிதாகும். ஆனால், இந்தக் குழந்தைக்கு கொரோனா தொற்றுடன் சேர்ந்து கடுமையான பாக்டீரியா தொற்றும் ஏற்பட்டது. இதன் காரணமாக உடல் முழுவதும் தொற்று பரவி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கடுமையான இரத்த நச்சுத்தன்மை நிலை உருவானது.

இதனால் குழந்தையின் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் வழக்கமான பாக்டீரியா தொற்றுக்கும், கொரோனா தொற்றுக்குப் பிறகு ஏற்படக்கூடிய பல்வேறு உறுப்புகளில் அழற்சி ஏற்படுத்தும் பாதிப்புக்கும் இடையிலான வேறுபாட்டை கண்டறிவது மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சாந்தனு ரே தலைமையிலான மருத்துவக் குழுவினர், பல்வேறு மேம்பட்ட மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அதன் மூலம் குழந்தையின் உடல்நிலைக்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து, உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினர்.கொரோனா தொற்று மற்றும் இரத்த நச்சுத்தன்மை பாதிப்பால் குழந்தையின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் குழந்தை திணறிய நிலையில், உடனடியாக செயற்கை சுவாச உதவி வழங்கப்பட்டது.அதே நேரத்தில், உடலில் பரவியிருந்த கொரோனா மற்றும் பாக்டீரியா தொற்றுகளை கட்டுப்படுத்த நரம்பு வழியாக நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.
மேலும், குழந்தையின் உடல்நிலைக்கு ஏற்ற வகையில் சிறப்பு மருந்துகளும் மிகத் துல்லியமான அளவில் செலுத்தப்பட்டன.குழந்தையின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால், மருத்துவர்கள் அடுத்தகட்ட சிகிச்சையாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும் காமா குளோபுலின் எனப்படும் ரத்தப் புரதத்தை செலுத்த முடிவு செய்தனர்.தீவிர சிகிச்சை தொடங்கிய ஐந்தாவது நாளில் குழந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
இருப்பினும், தொற்றுகள் முழுமையாக கட்டுக்குள் வரும் வரை குழந்தையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர்.மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சையின் பலனாக, குழந்தையின் உடலில் இருந்த தொற்றுகள் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டன.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்ட அந்தப் பச்சிளம் குழந்தை, தற்போது முழுமையாக குணமடைந்து பெற்றோருடன் வீடு திரும்பியுள்ளது.கொரோனா தொற்றுடன் பிறவியிலேயே ஏற்பட்ட கடுமையான தொற்று பாதிப்பும் இருந்தபோதிலும், நோயை விரைவாக கண்டறிந்து உரிய நேரத்தில் தீவிர சிகிச்சை அளித்தால் பச்சிளம் குழந்தைகளையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீட்க முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சாந்தனு ரே தெரிவித்ததாவது,“குழந்தைக்கு ஒரே நேரத்தில் செப்சிஸ் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால், இரண்டையும் கட்டுப்படுத்துவது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. பல்வேறு உறுப்புகளை பாதிக்கக்கூடிய இந்த வகையான அழற்சி நோயில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
குழந்தையின் உடல்நிலை மிக வேகமாக மோசமடைந்ததால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராடும் எதிர்ப்புப் பொருளாக செயல்படும் காமா குளோபுலின் என்ற ரத்தப் புரதத்தை செலுத்த முடிவு செய்தோம்.
சிகிச்சையின் ஐந்தாவது நாளில் குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும், முழுமையாக குணமடையும் வரை அந்தப் பச்சிளம் குழந்தையை தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருந்தோம்” என்று மருத்துவர் சாந்தனு ரே தெரிவித்தார்.
English Summary
Corona blood poisoning birth treatment performed by doctors medical miracle Kolkat