நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியா?
bjp discussion union minister nirmala seetharaman participate election
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிட உள்ளது. இந்தத் தொகுதியில், பிரபலமான நபரை வேட்பாளராக தேர்ந்தெடுக்குமாறு முதலமைச்சரும், கூட்டணி கட்சி தலைவருமான ரங்கசாமி பாஜகவுக்கு யோசனை தெரிவித்தார்.
இதையடுத்து, பாஜக சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுவை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், சிவசங்கரன் உள்ளிட்டோரது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால், இவர்களில் யார் வேட்பாளர்? என்பது இறுதி செய்யப்படாத நிலையில் பாஜக 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள சுகன்யா கன்வன்சன் சென்டரில் நேற்று மாலை பாஜக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கார்டு ஓட்டலில் தங்கி இருந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது நாடாளுமன்ற தேர்தல் நிலவரம், புதுவை தொகுதியில் பாஜக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்தும் பேசபட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது புதுவை மாநில மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், மாநில பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
English Summary
bjp discussion union minister nirmala seetharaman participate election