பாஜக வேட்பாளரின் கை எலும்பு முறிவு; தொண்டர்களுக்கு படுகாயம்; மேற்கு வங்கத்தில் இறுதிகட்ட பிரசாரத்தில் வன்முறை..!
BJP Candidate Suffers Fractured Hand in Violence During Final Phase of Campaigning in West Bengal
மேற்கு வங்க மாநிலம் மேதினிபூரில் தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறையில் பாஜக வேட்பாளர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் நாளை 152 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில், மேற்கு மேதினிபூரின் தாதன் பகுதியில் நேற்று பாஜக சார்பில் இறுதிகட்ட பிரசார பைக் பேரணி நடத்தப்பட்டது. ஹரிபூரில் தொடங்கி அந்தலா வழியாக மோகன்பூர் நோக்கிச் சென்ற இப்பேரணியின் போது, திடீரென ஒரு கும்பல் தடிகளாலும் கூர்மையான ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தியது.
இதில் பாஜக வேட்பாளரான அஜித் குமார் ஜனா (தொழிலதிபர்) படுகாயமடைந்து அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாஜக தொண்டர்கள் பலர் காயமடைந்ததோடு, வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தாதன் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் சந்திர பிரதான் வெறும் 623 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த கொடூர தாக்குதல் குறித்து பாஜகவினர் கூறுகையில்,
'திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தினர்' என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதாவது, அரசியல் உள்நோக்கத்துடன் பாஜகவினர் கலவரத்தைத் தூண்டுவதாக கூறியுள்ளது. தற்போது அங்கு அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
English Summary
BJP Candidate Suffers Fractured Hand in Violence During Final Phase of Campaigning in West Bengal