கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகமே காரணம்: கூடுதல் காவல் ஆணையரின் சஸ்பெண்டை ரத்து செய்துள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்..!
Bengaluru Additional Commissioner of Polices suspension lifted in RCB victory celebration crowd issue
முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினருக்கு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கி 05 பெண்கள், 06 ஆண்கள் என மொத்தம் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததும், அவசரமாக விழாவை நடத்தியதும் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த், கூடுதல் காவல் ஆணையர் விகாஸ் குமார் உள்பட 05 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி விகாஸ் குமார், தன் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருந்ததாவது: விசாரணை முறைகேடாக நடைபெற்றதாகவும், தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விகாஸ் குமார் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால், தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்து, மீண்டும் தன்னை பணியில் அமர்த்த வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
குறித்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகமே காரணம் என்பதற்கு முதற்கட்ட ஆதாரம் உள்ளது எனக் கூறி, பெங்களூரு கூடுதல் ஆணையர் விகாஸ் குமாரின் பணியிடை நீக்கத்தை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. அத்துடன் அவர் வகித்த பொறுப்பை மீண்டும் வழங்கவும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Bengaluru Additional Commissioner of Polices suspension lifted in RCB victory celebration crowd issue