பிரியாணிக்குப் பின் தர்பூசணி...! அடுத்த சில மணிநேரத்தில் நேர்ந்த கோரம்...! - ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி...!
After biryani watermelon tragedy that happened next few hours 4 people from same family died
மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரிலுள்ள பைதோனி பகுதியின் பழமையான முகல் கட்டிடத்தில் வசித்து வந்தவர் அப்துல்லா (40). இவரது மனைவி நஸ்ரீன் (35). இவர்களுக்கு ஆயிஷா (16), ஷைனப் (13) என்ற இரு மகள்கள் இருந்தனர்.கடந்த சனிக்கிழமை, அப்துல்லாவின் இல்லத்திற்கு ஐந்து உறவினர்கள் வருகை தந்திருந்தனர்.
இதனால், இரவு சுமார் 10.30 மணியளவில் அனைவரும் சேர்ந்து சுவைமிகு சிக்கன் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர். பின்னர் உறவினர்கள் திரும்பிச் சென்றதையடுத்து, நள்ளிரவு 1 மணியளவில் அப்துல்லா குடும்பத்தினர் தர்பூசணி பழத்தை உண்டனர்.இந்நிலையில், அடுத்த நாள் அதிகாலை 5.30 மணியளவில், குடும்பத்தினரான நால்வருக்கும் திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

வாந்தி மற்றும் தீவிர வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட அவர்கள், உடனடியாக அருகிலிருந்த குடும்ப மருத்துவரிடம் முதற்கட்ட சிகிச்சை பெற்றனர். அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜே.ஜே. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.ஆனால், விதியின் கொடூரம் அங்கே வெளிப்பட்டது. அன்று காலை 10.15 மணியளவில், அப்துல்லாவின் இளைய மகள் ஷைனப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, சில மணி நேரங்களுக்குள் அவரது மனைவியும் மூத்த மகளும் உயிரிழந்தனர். இறுதியாக, இரவு நேரத்தில் அப்துல்லாவும் உயிரிழந்து, ஒரே குடும்பத்தின் நான்கு உயிர்கள் பரிதாபமாக அணைந்தன.அதே நேரத்தில், சிக்கன் பிரியாணி உண்ட உறவினர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதது புதிராக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
பிரியாணிக்குப் பின்னர் தர்பூசணி பழம் உண்டதையடுத்து இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால், அந்தப் பழம் விஷத்தன்மை கொண்டதாக மாறியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், உண்மையான மரணக் காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெளிவாக வெளிவரும் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஜே.ஜே. மார்க் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சிக்கன் பிரியாணிக்குப் பின்னர் தர்பூசணி உண்ட ஒரே குடும்பத்தினர் நால்வரும் அடுத்தடுத்து உயிரிழந்த இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
After biryani watermelon tragedy that happened next few hours 4 people from same family died