பீஹார் சோகம்; தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 04 பேர் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்..!
4 Dead and 20 Critically Injured in Fire at Private Hospital in Bihar
பிஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டீயில் சிக்கி, 04 பேர் உயிரிழந்துள்ளதோடு, 20 பேர் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து பின்னர் கட்டிடம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீ அணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையின் படி, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மூத்த காவல் கண்காணிப்பாளர் காந்தேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

தற்போது தீ விபத்து சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நிஷாந்த் தெரிவித்துள்ளார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் சாம்ராட் சவுத்ரி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.04 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''முசாபர்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 04 பேர் உயிரிழந்தது மிகவும் துயரமான நிகழ்வு. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், இந்த துயரமான நேரத்தில் அவர்களின் குடும்பத்தினர் துயரை தாங்கும் மனவலிமையை இறைவன் வழங்கவும் பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.04 லட்சம் நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில், இன்று முசாபர்பூரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
4 Dead and 20 Critically Injured in Fire at Private Hospital in Bihar