10 ஆண்டு கால சட்டப் போராட்டம்...! வாலிபர் மரணத்தில் ஆய்வாளர் உட்பட 8 காவலர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு உறுதி...!
10 year legal battle Murder charges confirmed against 8 police officers including inspector death teenager
மும்பை வடலா ரயில்வே காவல் நிலையத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு லாக்-அப் மரண விவகாரம், தற்போது சம்பந்தப்பட்ட காவலர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 2014-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு திருட்டுச் சம்பவம் தொடர்பாக, அக்னெல்லோ வால்டாரிஸ் என்ற இளைஞரும் அவரது நண்பர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

ஆனால், காவல் துறையின் பிடியில் இருந்தபோதே அக்னெல்லோ மர்மமான முறையில் உயிரிழந்தது அதிகார வர்க்கத்தின் மீதான நம்பிக்கையை உலுக்கியது.தண்டவாளத்தைக் கடந்து தப்பிக்க முயன்றபோது ரயில் மோதி அவர் இறந்ததாகக் காவல் துறை தரப்பில் மழுப்பலான விளக்கம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், அது தற்காப்புக்காகக் புனையப்பட்ட பொய் என்றும், கொடூரமான சித்ரவதையே அந்த இளைஞனின் உயிரைப் பறித்தது என்றும் உறவினர்கள் சட்டப் போராட்டத்தில் இறங்கினர். இந்த நீண்ட காலப் போராட்டத்தின் விளைவாக, 2022-ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் சம்பந்தப்பட்ட 8 காவலர்கள் மீது 'கொலை வழக்குப்' பதிவு செய்ய அதிரடி உத்தரவிட்டது.
தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டி, ஆய்வாளர் ஜிதேந்திர ரத்தோடு உள்ளிட்ட எட்டு அதிகாரிகளும் மும்பை உயர் நீதிமன்றத்தில் தஞ்சம் புகுந்தனர்.
ஆனால், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ். கட்காரி மற்றும் ஷியாம் சந்தக் அடங்கிய அமர்வு, காவலர்களின் வாதங்களை ஏற்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தது.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததன் மூலம், அதிகார மிரட்டலுக்குப் பின்னால் மறைந்திருந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
காவல் காக்க வேண்டியவர்களே கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
10 year legal battle Murder charges confirmed against 8 police officers including inspector death teenager