மாணவர்களே தயாரா...? மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்...!
Students are you ready Counseling medical studies begins tomorrow
'நீட்' தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது என்று மத்திய மருத்துவ ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. இதையடுத்து மருத்துவக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து இணையவழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. முதல் கட்டமாக வழங்கப்பட்ட காலக்கெடுவில் 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பதிவாகின.

பின்னர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 2 ஆயிரத்து 141 பேர் விண்ணப்பித்தனர். இதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் 72 ஆயிரத்து 627 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தற்போது அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியாகியுள்ளது.
அதன்படி, 'நீட்' தகுதி மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாநில ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான இறுதி காலக்கெடு அக்டோபர் 10-ந்தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை, மருத்துவப் படிப்புகளுக்காக பெறப்பட்டுள்ள 72 ஆயிரத்து 627 விண்ணப்பங்களும் தற்போது தீவிர பரிசீலனையில் உள்ளன.
அவற்றின் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்ததும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதனைத் தொடர்ந்து மாநில மருத்துவக் கலந்தாய்வுக்கான முழுமையான அட்டவணையை மருத்துவக் கல்வி இயக்ககம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Students are you ready Counseling medical studies begins tomorrow