நீட் தேர்வுக்குத் தயாரான தூத்துக்குடி...! 5 மையங்களில் பலத்த பாதுகாப்பு..! - நீட் தேர்வு எழுத 1,968 பேர் விண்ணப்பம்...!
Thoothukudi ready NEET exam Heavy security 5 centers 1968 people applied write NEET exam
நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் முக்கிய அறிவுறுத்தல்களை பகிர்ந்தார்.அவரது விளக்கத்தின் படி, மாவட்டம் முழுவதும் ஐந்து தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி (480 பேர்), கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (480 பேர்), புனித லசால் மேல்நிலைப்பள்ளி (240 பேர்), அரசு பாலிடெக்னிக் கல்லூரி (288 பேர்), மற்றும் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (480 பேர்) ஆகும். மொத்தமாக 1,968 மாணவ, மாணவியர்கள் இந்த முக்கியத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

தேர்வர்கள் எந்த சிரமமும் இன்றி தங்கள் மையங்களுக்கு சென்று வருவதற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியத்திற்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை க்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:
தேர்வர்கள் காலை 11 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் கட்டாயம் அணுக வேண்டும். மதியம் 1:30 மணிக்கு பின்னர் வருபவர்கள் எந்த சூழ்நிலையிலும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட பொருட்கள்:
செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், பேஜர் போன்ற மின்னணு கருவிகள், புத்தகங்கள், கைப்பைகள் போன்றவை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கல்யாணசுந்தரம், தூத்துக்குடி ஏ.எஸ்.பி. ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Thoothukudi ready NEET exam Heavy security 5 centers 1968 people applied write NEET exam