'செயின கழட்டுங்க பாட்டி... இல்லனா அரசு காசு கிடைக்காது'...! - தூத்துக்குடியில் 75 வயது மூதாட்டியிடம் 1 பவுன் நகையை அபேஸ் செய்த பெண்...!
Woman who stole 1 pound of jewelry from 75 year old woman Thoothukudi
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி பார்வதி (75), மோசடி கும்பலின் திட்டமிட்ட ஏமாற்று வலையில் சிக்கி நகையை பறிகொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஜூன் 19-ஆம் தேதி மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பார்வதி மட்டும் தனியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த சமயத்தில், அடையாளம் தெரியாத மர்மப் பெண் ஒருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து, மூதாட்டியுடன் இயல்பாக உரையாடத் தொடங்கியுள்ளார்.அப்போது, “அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நிதி உதவிக்கான விவரங்களை பதிவு செய்ய வந்துள்ளேன்” என்று கூறி நம்பிக்கை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்த அந்தப் பெண், தொடர்ந்து பார்வதியிடம் பேச்சுக் கொடுத்து அவரின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்றுள்ளார்.இதையடுத்து, தனது மோசடி நாடகத்தின் அடுத்த கட்டமாக, “அரசு அதிகாரி ஒருவர் வெளியே சரிபார்ப்புக்காக காத்திருக்கிறார்.
நீங்கள் கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தால் வசதியானவர் என்று நினைத்து நிதி உதவியை மறுத்துவிடலாம். ஆகவே செயினை கழற்றி பாதுகாப்பாக வைத்துவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.இதனை உண்மையென நம்பிய பார்வதி, தன் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றியுள்ளார்.
உடனே அந்த மர்மப் பெண், “என்னிடம் கொடுங்கள்... நான் பாதுகாப்பாக வைத்துத் தருகிறேன்” என்று கூறி சங்கிலியை தன் வசப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின், “அதிகாரி பேருந்து நிறுத்தம் அருகே நிற்கிறார்... அங்கே செல்வோம்” என்று கூறி, மூதாட்டியை பேருந்து நிறுத்தம் வரை அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு சென்றதும், திடீரென வந்த பேருந்தில் அந்தப் பெண் மின்னல் வேகத்தில் ஏறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பார்வதி தன் சங்கிலியை கேட்டபோது, “நாளை உங்கள் வீட்டிற்கே வந்து கொடுத்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு பேருந்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போதுதான் தாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பார்வதி கடும் அதிர்ச்சியடைந்தார்.வீட்டிற்கு திரும்பிய அவர், தனது மகன் பூபதியிடம் நடந்த சம்பவத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பூபதி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வடபாகம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, பேருந்து நிறுத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி நகையை பறித்துச் சென்ற மர்மப் பெண்ணை பிடிக்க காவலர்கள் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Woman who stole 1 pound of jewelry from 75 year old woman Thoothukudi