உயர்கல்வியில் 10% இடஒதுக்கீடு! புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
reservation higer education puducherry
காமராஜர் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் நடைபெற்ற மாணவர் நாள் விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்த அவர், கல்வி மற்றும் அரசு நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினார்.
"காமராஜர் ஊழலற்ற ஆட்சி, கல்விக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வழிகாட்டியாக இருந்தார். அவரது பாதையில் சென்று, அனைத்து மாணவர்களும் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கல்விக்காக ஆண்டுதோறும் ரூ.1,350 கோடியை ஒதுக்கும் அரசில், பள்ளிக் கல்விக்கு மட்டும் ரூ.950 கோடி செலவிடப்படுகிறது," என்றார்.
தற்போது மருத்துவக் கல்வியில் வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு போல, இனி *பிற பாடநெறிகளுக்கும்* இதேபோன்று இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், இது இந்த கல்வியாண்டிலேயே அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார்.
மேலும், லேப்டாப் வழங்கப்படவில்லை என்ற குறையை ஏற்றுக்கொண்டு, ஒரு மாதத்திற்குள் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப்கள் வழங்கப்படும் என உறுதியளித்தார். “பள்ளிக் கல்வியைத் தாண்டி, உயர்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அனைவரும் படிக்க வேண்டும். அடிப்படை கல்வி வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
இதேநேரத்தில், மாணவர்கள் நல்ல நூல்களை வாசிக்க வேண்டும், சரளமாக பேசும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனும் அறிவுரையும் முதல்வர் வழங்கினார். “நல்ல கல்வி, நன்னெறி, நல்ல வாழ்க்கை” என்பதே அரசின் இலக்கு எனவும் அவர் வலியுறுத்தினார்.
English Summary
reservation higer education puducherry