பெரியவர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?
kalil vizhunthu vanankuthal
ஆசீர்வாதம் என்றால் என்ன?
தமிழர்களின் கலாச்சார வழக்கத்தில் ஒன்று ஆசீர்வாதம். இது திருமணம், காதுகுத்து, பிறந்த நாள், கோவில்கள், விசேஷ தினங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குதல் சிறப்பு என்று கூறுவார்கள்.
காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?
பெரியவர்களைப் பார்த்தால் காலில் விழுவது, கோவிலில் விழுந்து கும்பிடுவது, யோகிகளைப் பார்த்தால் உடனே பாதத்தை தொட்டு வணங்குவது போன்ற வழக்கங்கள் காலங்காலமாக இருந்து வருகின்றது.
கலாச்சாரம் என்று பார்த்தால் மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம்.
பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே முழு மூலக்காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்பதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாதத்தை தொட்டு வணங்குகிறோம்.
அறிவியல் ரீதியாக உடலை வெறும் தசை, எலும்பு, நரம்பு என்று உறுப்புகளாக பார்க்கலாம். உடல் என்பது நம்மை ஆட்டுவிக்கும் ஒரு சக்தி. இந்த சக்திதான் நம்மை எல்லாவிதத்திலும் செயல்பட வைக்கிறது.
நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை பயன்படுத்தி கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் காலில் விழும் வழக்கம்.
கோவிலுக்கு சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவது சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோவிலில் கடவுள், சக்தி ரூபமாக விளங்குகிறார். அங்கிருக்கும் சக்தியை பெற்றுக்கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை.
அவ்வாறு, ஏற்கும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும், கோவிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும். அதாவது, கோவிலின் தரையில் அமர வேண்டும் அல்லது உடல் தரையில் படும்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
ஆண்கள் என்றால் தங்கள் உடல் தரையில் படும்படியாக வணங்குவார்கள். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வார்கள். பஞ்சாங்க நமஸ்காரம் என்பது தலை, கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும்.
என்ன சொல்லி வாழ்த்த வேண்டும்?
மனதிற்கு பிடித்தமான எந்தவொரு நல்ல சொல்லையும் கூறி வாழ்த்தலாம்.
பெண்களுக்கு - தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தலாம்.
ஆண்களுக்கு - சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தலாம்.
மணமக்களுக்கு - பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தலாம்.
English Summary
kalil vizhunthu vanankuthal