இளையராஜா கேட்டும் பாட மறுத்த யேசுதாஸ்! - “ஜனனி ஜனனி” மாஸ்டர் பீஸ் பாடல் உருவான கதை...!
Yesudas refused to sing even after being asked by Ilayaraja
தமிழ் திரையிசை உலகில் சில பாடல்கள் காலத்தைக் கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட ஆன்மிக உணர்வைத் தரும் பாடல்களில் முக்கியமான ஒன்று “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ”. இந்தப் பாடல் உருவான பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு நாள் இசைஞானி இளையராஜா தனது ஸ்டுடியோவில் புதிய பாடலின் பதிவு பணிக்காக அனைத்தையும் தயார் செய்திருந்தார். இசைக் கலைஞர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். அந்தப் பாடலை பாடுவதற்காக புகழ்பெற்ற பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நேரம் கடந்தும் யேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வரவில்லை.
பதிவு பணிகள் தாமதமாகாமல் இருக்க, “ஒரு ட்ரையல் பதிவு செய்து விடலாம்” என்று முடிவு செய்த இளையராஜா, அந்தப் பாடலை தானே பாடி ஒரு டெமோ பதிவு செய்தார். அதற்குப் பிறகு யேசுதாஸிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் அன்றைய தினம் வர முடியவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
மறுநாள் ஸ்டுடியோவுக்கு வந்த யேசுதாஸிடம், இளையராஜா அந்த ட்ரையல் பதிவை கொடுத்து “ஒரு முறை கேட்டு தயாராகுங்கள்” என்று கூறினார். பாடலை முழுவதுமாக கேட்ட யேசுதாஸ் ஆழமாக உணர்ச்சிவசப்பட்டார்.
பின்னர் அவர் நேரடியாக இளையராஜாவிடம் சென்று,
“இந்தப் பாடலில் இருக்கும் அந்த உணர்வையும் ஆழத்தையும் என்னால் அந்த அளவுக்கு வெளிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் பாடல் மக்களின் மனதில் என்றென்றும் நிலைக்க வேண்டுமானால், உங்கள் குரலில் தான் அது சாத்தியம்” என்று கூறி பாட மறுத்ததாக கூறப்படுகிறது.
இளையராஜா பலமுறை வற்புறுத்தியும் யேசுதாஸ் அந்த முடிவை மாற்றவில்லை. இறுதியில் அந்த பாடலை இளையராஜா தனது குரலில் பாடி பதிவு செய்தார்.
அந்தப் பாடல் தான் 1982ஆம் ஆண்டு வெளியான “தாய் மூகாம்பிகை” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ” என்ற அமரப் பாடல். இன்று வரை அந்த பாடலை கேட்டால் பலரின் மனதையும் நெகிழச் செய்யும் அளவுக்கு அது ஆன்மிக உணர்வை தருகிறது.
ஒரு பாடல் சரியான குரலில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தன்னிடம் வந்த வாய்ப்பையே யேசுதாஸ் விட்டுக்கொடுத்தது அவரது இசைப் பெருந்தன்மையை காட்டும் சம்பவமாக ரசிகர்களால் பேசப்படுகிறது.
English Summary
Yesudas refused to sing even after being asked by Ilayaraja