நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!
Soundarya Rajinikanth provided welfare assistance to the differently abled and women in Nagercoil
நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மே 15ஆம் தேதி நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.
நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன. இதில் ‘வித் லவ்’ திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளராக இந்த ஆண்டு வெளியான ‘வித் லவ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து சமூக நலப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்’ நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், சில பயனாளிகளுக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் நேரடியாக செயற்கைக் கால்களை பொருத்தி உதவிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டுகளை பெற்றுள்ளன.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்களும் வழங்கப்பட்டன. சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைந்ததாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த், பயனாளிகளுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்தார். சமூக நலனுக்காக தொடர்ந்து இதுபோன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
English Summary
Soundarya Rajinikanth provided welfare assistance to the differently abled and women in Nagercoil