பின்னணி பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா காலமானார் – திரையுலகம் இரங்கல்
Playback singer Janaki son Murali Krishna passes away Film industry mourns
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகியின் மகனும் நடிகருமான முரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜனவரி 22) காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
17 மொழிகளில் 45,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்த எஸ். ஜானகி, ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என அன்புடன் அழைக்கப்படுகிறார். நான்கு தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள அவர், இசை உலகில் தனித்துவமான உயரத்தை எட்டியவர். 2013-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டபோதும், அது தாமதமாக வழங்கப்பட்டதாகக் கூறி அதை ஏற்க மறுத்தது பெரும் விவாதமாக அமைந்தது. பின்னர் 2016-ஆம் ஆண்டு திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜானகி, ஹைதராபாத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
அவருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணா, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முரளி கிருஷ்ணாவின் மனைவி உமா பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞர் ஆவார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்; இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கருத்து வேறுபாடுகள் காரணமாக மனைவியிடம் இருந்து பிரிந்த முரளி கிருஷ்ணா, தாயார் ஜானகியுடன் வாழ்ந்து வந்தார்.
முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வழியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசை உலகுக்கு அளவற்ற சேவை செய்த ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம், ரசிகர்களின் மனங்களிலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Playback singer Janaki son Murali Krishna passes away Film industry mourns