"என்னை ஏன் குறிவைக்கிறார்கள்?" - நடிகை காயடு லோஹர் கண்ணீர் விட்டு அளித்த பேட்டி!
Kayadu Lohar interview
சென்னை: இந்த ஆண்டு வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களிடையே பிரபலமானவர் நடிகை காயடு லோஹர். இந்தப் படத்தைத் தொடர்ந்து அதர்வா முரளியின் 'இதயம் முரளி' மற்றும் ஜி.வி. பிரகாஷின் 'இம்மோர்ட்டல்' ஆகிய படங்களில் அவர் தற்போது நடித்து வருகிறார்.
இந்தச் சூழலில், காயடு லோஹர் இரவுநேர பார்ட்டிகளில் பங்கேற்க லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக ஒரு தயாரிப்பாளர் அமலாக்கத்துறை விசாரணையில் கூறியதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த காயடு லோஹர், சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் இது தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.
நேர்காணலில் கண்கலங்கியபடி பேசிய அவர், "சமூக ஊடகங்களில் என்னைப் பற்றிப் பரவும் அவதூறு கருத்துகள் எனக்கு மிகவும் வேதனை அளிக்கின்றன. நான் ஒரு கண்ணியமான பின்னணியில் இருந்து வந்தவள். பின்னால் பேசுபவர்கள் குறித்து நான் கவலைப்படவில்லை என்றாலும், அது ஆழ் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கும்."
தொடர்ந்து பேசிய அவர், "நான் எந்தத் தவறும் செய்யாமல், எனது கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்போது, ஏன் என்னைத் குறிவைக்கிறார்கள் (Target) என்று புரியவில்லை," என்று உணர்ச்சிவசப்பட்டுத் தனது வேதனையைத் தெரிவித்தார்.