"மனுசி" படத்திற்கு தணிக்கை சான்று மறுப்பு: இயக்குநர் வெற்றிமாறன் வழக்கு..!
Director Vetrimaaran files case against refusal to issue censor certificate to Manusi
இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022-ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தையம் இறுதியாக தயாரித்திருந்தார்.
இந்நிலையில், அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் 'மனுசி' படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது.

பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் டிரையிலர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்திற்கான தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்துள்ளது. அதாவது, இப்படம் மாநில அரசை மோசமாக சித்தரிப்பதாக உள்ளது என்றும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தணிக்கை சான்று தர மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'மனுசி' படத்தை நிபுணர் குழு அமைத்து மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் வெற்றிமாறன் தெரிவித்துள்ளதாவது, தணிக்கை சான்று மறுத்து உத்தரவு பிறப்பிக்கும் முன், தணிக்கை வாரியம் தன் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை எனவும், தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தனக்கு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருப்பதாகவும், படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய தனது விண்ணப்பத்தின் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
Director Vetrimaaran files case against refusal to issue censor certificate to Manusi