29 வருட குடும்ப வாழ்க்கை.. விவாகரத்து ஏன்?.. ஏ.ஆர். ரகுமான் மனம் திறந்த பேட்டி!
29 years of family life Why divorce AR Rahman candid interview
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர் ஏ.ஆர். ரஹ்மான். ஆஸ்கர், கிராமி, கோல்டன் குளோப், தேசிய விருதுகள் என எண்ணற்ற சாதனைகளால் “இசை சக்கரவர்த்தி” என போற்றப்படும் ரஹ்மான், தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அரிதாகவே பேசுவார். ஆனால், மனைவி சாய்ரா பானுவுடன் ஏற்பட்ட பிரிவைப் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.
ரஹ்மான் கூறுகையில், “இது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. புகழ் எப்போதும் ஒரு இருண்ட பக்கத்தைக் கொண்டது. 29 ஆண்டு திருமண வாழ்க்கையில் நான் மனைவி மற்றும் குழந்தைகளுடன் செலவழித்த நேரம் மிகவும் குறைவு. தொடர்ந்து இசை, வேலை, பயணங்கள்… இது எல்லாம் குடும்பத்தில் மனஅழுத்தத்தை உருவாக்கியது. நீண்டகாலமாகப் படிந்த அழுத்தங்களின் விளைவுதான் இந்த இடைவெளி,” என தெரிவித்தார்.
அவர் மேலும், “நான் இந்த அனுபவத்தின் மூலம் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளேன். சமீபமாக கதீஜா, ரஹீமா, அமீன் ஆகிய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடத் தொடங்கியுள்ளேன். தற்போது என் மூன்று குழந்தைகளும் சாய்ரா பானுவுடன்தான் வசித்து வருகிறார்கள்,” என்று கூறினார்.
இதற்கு முன்பு, சாய்ரா பானுவும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில்,
“நாங்கள் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை. நாங்கள் இன்னும் கணவன்–மனைவியே. கடந்த இரண்டு ஆண்டுகளாக என் உடல்நிலை பிரச்சினைகளால் பிரிந்து வாழ்கிறோம். ரஹ்மானுக்கு எந்த அழுத்தமும் கொடுக்க விரும்பவில்லை. எனை ‘ரஹ்மானின் முன்னாள் மனைவி’ என்று யாரும் அழைக்க வேண்டாம். அவர் எப்போதும் நலமாக இருக்க நான் பிரார்த்தனை செய்வேன்,” என தெரிவித்திருந்தார்.
இந்த இருவரின் மரியாதையும், புரிதலும், குடும்பத்திற்கான அக்கறையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
English Summary
29 years of family life Why divorce AR Rahman candid interview