ஹார்முஸ் நீரிணையை முற்றிலும் முடக்கும் அமெரிக்கா; ஆபத்தில் சிக்கும் அனைத்து கப்பல்கள்..?
Will all ships face peril as the US completely blocks the Strait of Hormuz
ஈரான் - அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக செல்லும் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா இன்று முதல் தடுத்து நிறுத்தும் என அதிகரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உலக நாடுகளை மிரட்டி கப்பல்களிடம் ஈரான் சட்டவிரோதமாக சுங்க வரி வசூலித்து வருகிறது. சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்கு பணம் செலுத்தும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்த வேண்டும். ஈரானால் வைக்கப்பட்ட கடல் கண்ணிவெடிகளை அகற்றி, வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை உருவாக்க வேண்டும்.
அமெரிக்க படைகள் மீதோ அல்லது அமைதியாக செல்லும் கப்பல்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தினால் அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். எனவே ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக தூய்மைப்படுத்த போகிறோம். ஈரான் தனது ஆதரவு நாடுகளுக்கு எண்ணெய் விற்று பணம் சம்பாதிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மற்ற நாடுகளின் கப்பல்கள் அங்கு செல்வதை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவோம் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பின்படி, இன்று இரவு 07.30 மணி முதல் இது அமலுக்கு வந்திருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) அறிவித்துள்ளது.
அத்துடன், அரபிக் வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா உள்ளிட்ட ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளைப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கு எதிராகவும் பாரபட்சமின்றி இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஈரானிய துறைமுகங்கள் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு மட்டுமே இந்த அமெரிக்கத் தடை விதிக்கப்படும் என்று கூறிய நிலையில், அமெரிக்க இராணுவம் ஜலசந்தியை முழுமையாக மூடவில்லை என்றும், ஈரான் அல்லாத இடங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் நடுநிலை போக்குவரத்தைத் தடுக்காது என்று சென்ட்காம் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையை இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கடுமையாக எச்சரித்துள்ளதுடன், கடலில் உள்ள கப்பல்களில் மூன்று மாதங்களுக்கு விற்பனை செய்வதற்குப் போதுமான எண்ணெய்யைத் தாம் சேமித்து வைத்திருப்பதாகவும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இன்னொரு புறம், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கக் கடற்படை முற்றுகையிடும் பட்சத்தில், மற்றொரு முக்கிய உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதையான பாப் அல் மண்டேபை சீர்குலைக்குமாறு தனது ஹவுதி கூட்டாளிகளுக்கு ஈரான் உத்தரவிடக்கூடும் எனச் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில், இந்தியாவின் எல்.பி.ஜி விநியோகத்தில் சுமார் 90 சதவீதம் இந்த வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு அப்பகுதியில் கடுமையாகக் கடந்து செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையில் திடீர் சரிவு ஏற்பட்டதாக ஆரம்பகட்ட கண்காணிப்பு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
அதன் படி, குறைந்தது 15 இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியின் நெருக்கடிப் பகுதிக்கு மேற்கே சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிக்கியுள்ள கப்பல் குழுவில் எல்என்ஜி மற்றும் எல்பிஜி ஏற்றிச் செல்லும் கப்பல்கள், கச்சா எண்ணெய் டேங்கர்கள், கொள்கலன் கப்பல்கள், ஒரு தூர்வாரும் கப்பல் மற்றும் ஒரு ரசாயன டேங்கர் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று அமெரிக்காவின் நட்பு நாடுகளான இங்கிலாந்தும் பிரான்சும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஓர் அமைதியான பன்னாட்டு கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகளை கூட்டாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Will all ships face peril as the US completely blocks the Strait of Hormuz