போர்க்குற்றங்கள்.. புதினுக்கு சீன அதிபர் அழுத்தம் கொடுக்க வேண்டும் - அமெரிக்கா
Us insist to China pressure Putin to stop war crimes
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நடந்துவரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றன . மேலும் ரஷ்யா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன் சீனா 12 அம்ச கொள்கையை வெளியிட்டது.
இதனிடையே மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்துவது மற்றும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகளால் நடந்து வரும் போர் குற்றங்களை தடுக்க புதினுக்கு சீனா அதிபர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, அமெரிக்கா வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும் பொழுது,
உக்ரைனில் மனிதாபிமானம் இல்லாமல் மருத்துவமனை, பள்ளிகள், பொது கட்டமைப்புகளின் மீது குண்டு வீசுவதை நிறுத்தவும், ரஷ்ய படைகளால் உக்ரைன் மக்களுக்கு ஏற்படும் அட்டூழியங்களை தடுக்கவும், ரஷ்ய போர் வீரர்களை திரும்ப பெறவும் ரஷ்ய அதிபருக்கு ஜின்பிங் அழுத்தம் கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உக்ரைனில் ரஷ்யப்படைகளை விட்டுச் செல்லும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு சீனா வலியுறுத்த வாய்ப்புள்ளதாகவும், ரஷ்ய படைகள் வெளியேறாமல் நடக்கும் சண்டை நிறுத்த ஒப்பந்தம், ரஷ்யாவின் சட்டவிரோத வெற்றிக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Us insist to China pressure Putin to stop war crimes