நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி ஒருமனதாக தேர்வு..!
Sushila Karki unanimously elected as Nepals interim Prime Minister
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கடந்த 08-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 900-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் காத்மாண்டுவில் உள்ள பாராளுமன்றம், தலைமை செயலகம், உச்சநீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் இல்லங்களை சூறையாடினர். இதனையடுத்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகியுள்ளதோடு, அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். இதனையடுத்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்ததால், அடுத்து தேர்தல் நடக்கும்வரை அரசை வழிநடத்த இடைக்கால பிரதமரை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் காத்மாண்டு மேயர் பாலென் ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி குல்மான் கிஷிங் ஆகியோரை போராட்டக் குழுவினர் பரிந்துரைத்தனர்.

ஆனால், பாலென் ஷா தனக்கு இதில் விருப்பம் இல்லை என அறிவித்த நிலையில், சுசீலா கார்கி, மற்றும் குல்மான் கிஷிங் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வதில் மாணவர்கள் அமைப்பினர் இடையே குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில்,இன்று இடைக்கால அரசின் பிரதமராக சுசீலா கார்கி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று இரவு பதவியேற்பார் என கூறப்படுகிற நிலையில், நேபாளத்தின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
English Summary
Sushila Karki unanimously elected as Nepals interim Prime Minister