தென்கிழக்கு ஆசியாவை தாக்கப்போகும் Heatwaves; நீண்டகால கடும் வெப்பம் அபாயம்; ஆய்வில் திடுக்கிடும் தகவல்..!
Shocking findings in a study on the risk of extreme heat in Southeast Asia
காலநிலை மாற்றம் உலகின் தட்பவெப்ப நிலையை சீர்குலைத்து வருகிறது. இந்த சூழலில், ஒவ்வொரு முறை உலகின் வெப்பநிலை சற்று அதிகரிக்கும் போதும், வெப்ப அலைகள் நீடிக்கும் நாட்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட அதிவேகமாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'நேச்சர் ஜியோசயின்ஸ்' (Nature Geoscience) இதழில், கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCLA) மற்றும் சிலியின் அடோல்போ இபானெஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், பூமியின் வெப்பநிலை சிறிது அதிகரித்தாலும், அது முந்தைய தாக்கங்களை விட மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று UCLA காலநிலை அறிவியலாளர் டேவிட் நீலின் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், வாரக்கணக்கில் நீடிக்கும் மிக அபூர்வமான மற்றும் கடுமையான வெப்ப அலைகள், இனிவரும் காலங்களில் அடிக்கடி ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறு நீண்ட காலம் நீடிக்கும் வெப்ப அலைகள் மனித ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, விலங்குகள், விவசாயம், மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இத்தகைய நீண்டகால வெப்ப அலைகள் வறட்சியை தீவிரப்படுத்துவதுடன், மின்சார விநியோகக் கட்டமைப்பில் அதிக அழுத்தத்தை உருவாக்கி, காட்டுத்தீ பரவும் அபாயத்தை அதிகரிக்கின்றன.

இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் முழுவதும் சமமாக இருக்காது என்றும், தென்கிழக்கு ஆசியா, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க பகுதிகள் மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, உதாரணத்திற்கு, 1990-2014 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2020-2044 காலகட்டத்திற்குள் பூமத்திய ரேகை ஆப்பிரிக்காவில் 35 நாட்களுக்கு மேல் நீடிக்கும் வெப்ப அலைகளின் எண்ணிக்கை 60 மடங்கு அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனால், நகரங்கள், விவசாயத் துறை மற்றும் மின் உற்பத்தி அமைப்புகள் இனிவரும் காலங்களில் சில நாட்கள் மட்டுமின்றி, வாரக்கணக்கில் நீடிக்கும் கடும் வெப்ப அலைகளை எதிர்கொள்ளும் வகையில் தங்களை உடனடியாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
English Summary
Shocking findings in a study on the risk of extreme heat in Southeast Asia