அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது – அமெரிக்காவுக்கு உச்சத் தலைவர் காமேனி பதிலடி!
Iran will not bow to the US on the nuclear issue Supreme Leader Khamenei responds to the US
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலைக்கு மத்தியில், ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அணு சக்தி தொடர்பாக அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்துவரும் சூழலில், காமேனி,
“அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் எங்களிடம் பலன் தராது. ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் எந்த சமரசமும் செய்யாது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்வது சாத்தியமில்லை” என்று கடுமையாக எச்சரித்தார்.
கடந்த மாதம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் கடும் போர் நிலவியது.அந்த மோதலில், இஸ்ரேல் ஈரானின் அணு விஞ்ஞானிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.பதிலுக்கு, ஈரான் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டன.
இந்த மோதலின் போது, அமெரிக்காவும் நேரடியாக தலையிட்டு, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களைத் தாக்கியது.
இதன் தாக்கம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றாலும், “அந்த நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன” என அமெரிக்கா தெரிவித்தது.
இந்த சூழலில், காமேனி தனது உரையில்,“அணு சக்தித் திட்டம் எங்கள் நாட்டின் உரிமை. இது தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல, ஆனால் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து எங்களை அடக்க முடியாது” என வலியுறுத்தினார்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள், அமெரிக்காவின் தலையீடு, ஈரானின் கடுமையான பதில் ஆகியவற்றால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.சர்வதேச அரங்கில், அமெரிக்கா – ஈரான் உறவு மேலும் சிக்கலான நிலைக்கு மாறும் அபாயம் நிலவுகிறது.
English Summary
Iran will not bow to the US on the nuclear issue Supreme Leader Khamenei responds to the US