அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு...! - 2 பேர் பலி, 8 பேர் காயம்
Gunfire Brown University United States 2 dead 8 injured
அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணம் – பிராவிடென்ஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரவுன் பல்கலைக்கழகத்தில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடப் பகுதிகளில் மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் உயிரைப் பாதுகாக்க அலறியடித்து ஓடினர். இந்த பரபரப்பான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் பிராவிடென்ஸ் போலீசார் பல்கலைக்கழக வளாகத்துக்கு விரைந்து சென்று, முழுப் பகுதியையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். குற்றவாளியைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்பாளர்கள் அந்த பகுதியை தவிர்க்குமாறு அதிகாரிகள் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.பலி ஆனவர்களின் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை; விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பிராவிடென்ஸ் துணை காவல் அதிகாரி டிம் ஓஹரா கூறுகையில்,“கருப்பு உடை அணிந்த ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர் எவ்வாறு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அந்த நபர் ஹோப் ஸ்ட்ரீட் வழியாக தப்பிச் சென்றுள்ளார்” எனத் தெரிவித்தார்.குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த தொடர்ச்சியான வன்முறை சம்பவங்கள் அமெரிக்காவில் மீண்டும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
English Summary
Gunfire Brown University United States 2 dead 8 injured