பயங்கரவாதத்தின் பிடியில் பாகிஸ்தான்! - 48 மணிநேரத்தில் 145 தீவிரவாதிகள் ஒழிப்பு; பதற்றத்தின் உச்சியில் எல்லைப் பகுதிகள்...!
Pakistan grip terrorism 145 terrorists eliminated 48 hours border areas height tension
பாகிஸ்தானின் தென்மேற்கு எல்லைப் பகுதியான பலோசிஸ்தான் மாகாணத்தில், கடந்த 48 மணி நேரமாக பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதல்களில் 145 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழலை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

இதுகுறித்து பலோசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த 40 மணி நேரத்தில் திட்டமிட்ட நடவடிக்கைகளின் மூலம் 145 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் ஒழித்துள்ளனர்" என உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்த உக்கிரமான மோதல்களுக்கிடையே 31 அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் 17 பாதுகாப்புப் படை வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. 'தென் ஆசிய பயங்கரவாத தகவல் மையத்தின்' (SATP) புள்ளிவிவரங்களின்படி, 2024-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 3,967 பேர் வன்முறைக்குப் பலியாகியுள்ளனர்.
இது 2015-க்குப் பிந்தைய ஒரு தசாப்த காலக்கட்டத்தில் பதிவான மிக மோசமான உயிரிழப்பாகக் கருதப்படுகிறது.இயற்கை எழிலும் கனிம வளங்களும் கொழிக்கும் பலோசிஸ்தான், தற்போது போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.
இப்பகுதியின் இயற்கை வளங்களில் உரிய பங்கும், அரசியல் விடுதலையும் கோரிப் போராடி வரும் பலோச் தேசியவாத அமைப்புகளின் தீவிர செயல்பாடுகளே இந்தப் பதற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.
கடந்த வார இறுதியில் பல மாவட்டங்களில் ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வன்முறைச் செயல்களுக்குப் பின்னால் "இந்தியாவின் ஆதரவு" இருப்பதாகப் பாகிஸ்தான் வழக்கம்போலக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைப் "பச்சைப்பொய் மற்றும் ஆதாரமற்றவை" என்று கூறி இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
English Summary
Pakistan grip terrorism 145 terrorists eliminated 48 hours border areas height tension