அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல் - 5 பேர் பலி.!
five peoples died in america for snow storm
அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவிற்கு மிகவும் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால், பெரும்பாலான மாகாணங்களில் பனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் பனிப்புயல் வீசியது.
இந்த பனிப்புயலால், பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பல நகரங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இந்த பனிப்புயலால் சான் பிரான்சிஸ்கோ நகர் முழுவதும் பனியால் மூடப்பட்டு, சாலைகளில் நிறுத்தியிருந்த கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், அங்குள்ள மக்கள் அத்தியாவசத்திற்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பனிப்புயலால் 700-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியானார்கள்.
அதைத் தொடர்ந்து, கடும் குளிருக்கு மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த பனிப்புயல் தொடர்பாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாவது, "உயிருக்கே அச்சுறுத்தல் நிலவும் இந்த பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் அதிலும் குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்" என்றுத் தெரிவித்துள்ளது.
English Summary
five peoples died in america for snow storm