தமிழ்நாட்டில் கேட்டர்பில்லர் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு!...முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 11.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோவில், கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அந்நிறுவனத்தின் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தொழில் துறையில், உலக அளவிலான கவனத்தையும் தமிழ்நாடு பெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருப்பதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டில் உயர்கல்விச் சேர்க்கை விகிதம் நாட்டின் சராசரியைவிட மிக அதிகமாக உள்ளதோடு. திறன்மிக்க பணியாளர்களையும் தமிழகம் பெற்றுள்ளது, பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. மேலும், தமிழ்நாடு அதிக முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கின்ற வகையில், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களையும் அமைத்து வருகிறது.

2030-ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்று உயரிய இலக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்து, அந்த இலக்கை அடைவதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ச்சியாக 11.9.2024 அன்று சிகாகோவில், கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆஃப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு இயந்திரங்கள், தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் இன்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும்.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Caterpillar invests Rs 500 crore in Tamil Nadu MoU in presence of Chief Minister


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->