இந்தியா சுதந்திரமான நாடு என்ற முறையில் உறவு: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி..!
Afghanistan responds to Pakistan says India has relations as an independent country
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு இந்தியாவை பாகிஸ்தான் தொடர்புபடுத்தியதற்கு, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதன் போது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு பதிலுக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். ஒரு சில நாட்கள் நடந்த மோதல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால் ஆப்கன் - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட தாக்குதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், '' இந்தியாவின் மடியில் அமர்ந்து கொண்டு ஆப்கானிஸ்தான், எங்களுக்கு எதிராக செயல்படுகிறது,'' எனக் குற்றம் சாட்டியிருந்தார். இதனை இந்திய அரசு அடியோடு மறுத்துள்ளதோடு, பாகிஸ்தான் தனது சொந்த தோல்விகளை மறைக்க மற்ற நாடுகள் மீது குற்றம் சுமத்துவதாகவும், ஆப்கானிஸ்தான் இறையாண்மை மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் மவ்லாவி முகமது யாகூப் முஜாகித் கூறுகையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எங்களின் பிராந்தியத்தை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை எங்கள் கொள்கை ஆதரிக்காது. ஆப்கன், சுதந்திரமான நாடு என்ற முறையில் இந்தியாவுடன் உறவை பராமரிக்கிறோம். எங்கள் நாட்டின் நலன் அடிப்படையில் உறவை வலுப்படுத்துவோம்' என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
Afghanistan responds to Pakistan says India has relations as an independent country