மக்களே எச்சரிக்கையா இருங்க.. 10-ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா..?
Heavy rains likely in some districts of Tamil Nadu from the 10th
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, எதிர்வரும் 10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநில பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

அத்துடன், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் நாளை மறுநாள், இடி மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எதிர்வரும் 10-இல் கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,12- ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேப்போல தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட, 03 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக் கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கையின் படி, நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட் (39.8 டிகிரி செல்ஷியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டையில், 103 டிகிரி பாரன்ஹீட் (39.3 டிகிரி செல்ஷியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன், சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் (38 டிகிரி செல்ஷியஸ்) க்கு மேல் வெப்பம் பதிவானதாக தெரிவிப்பட்டுள்ளது.
English Summary
Heavy rains likely in some districts of Tamil Nadu from the 10th