மக்களே உஷார்!.. தெரியாத நம்பர்களில் ஹலோ சொல்லும் முன் இத பண்ணுங்க! எச்சரிக்கும் சைபர் கிரைம் நிபுணர்கள்!
People beware Do this before saying hello to unknown numbers Cybercrime experts warn
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பல துறைகளில் மனிதர்களுக்கு உதவியாக இருப்பதோடு, சைபர் மோசடிகளுக்கும் புதிய வழிகளைத் திறந்து வைத்துள்ளது. குறிப்பாக, ஒருவரின் குரலை அவருக்கே தெரியாமல் குளோனிங் செய்து பயன்படுத்தும் மோசடிகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு, ஹைதராபாதில் 72 வயதான பாட்டி ஒருவர் ஏஐ வாய்ஸ் குளோனிங் மோசடிக்குக் குறியாகியுள்ளார். நியூஜெர்சியில் வசிக்கும் தனது நாத்தனாரின் பெயரில், ஒரு புதிய வாட்ஸ்அப் நம்பரில் இருந்து பணம் கேட்ட மெசேஜ் வந்துள்ளது. புதிய நம்பர் என்பதால் பாட்டிக்கு சற்று சந்தேகம் இருந்தாலும், உடனே அந்த நம்பருக்கு கால் செய்தார். போனில் நாத்தனாரின் குரல் கேட்டதும், பாட்டி நம்பி ரூ.1.97 லட்சத்தை அனுப்பிவிட்டார். பணம் அனுப்பிய சில விநாடிகளில் அந்த நம்பர் அவரை பிளாக் செய்துவிட்டது.
பின்னர் மற்றொரு உறவினரிடம் விசாரித்தபோது தான் பாட்டி ஏமாந்து விட்டதை உணர்ந்தார். பணம் கேட்டது நிஜ நாத்தனார் அல்ல. ஆனால் போனில் கேட்ட குரல் எப்படி அவருடையதுபோல இருந்தது என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து ஹைதராபாத் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்கப்பட்டதும், போலீசார் ஏஐ வாய்ஸ் குளோனிங் மோசடி முறையை விளக்கியுள்ளனர்.
போலீசார் கூறியதாவது – தெரியாத எண்களில் இருந்து முதலில் சிறிய கால் ஒன்றை விடுவார்கள். நீங்கள் போன் எடுத்து ‘ஹலோ’ என்று பேசும் அந்த சில விநாடிகள் போதுமானது. அந்த குரல் பதிவை எடுத்துக் கொண்டு ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உங்கள் வாய்ஸை முழுமையாக குளோன் செய்து விடுவார்கள். அதன் பிறகு, உங்கள் உறவினர்களுக்கு நீங்கள் பேசுகிறீர்கள் போல ஆடியோ மெசேஜ் அனுப்பி அல்லது கால் செய்து, அவசரமாக பணம் தேவை என்று சொல்லி ஏமாற்றுவர். நிஜ குரலுக்கும் ஏஐ உருவாக்கிய குரலுக்கும் வித்தியாசம் கண்டறிவது பொதுவாக மிகவும் சிரமமானது என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் ஏஐ குரல் மோசடிகளால் ஏமாந்தவர்களில் 83 சதவீதத்தினர் பண இழப்பை சந்தித்துள்ளனர். இவர்களில் சுமார் 48 சதவீதத்தினர் ரூ.50,000-க்கும் அதிகமாக இழந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், இந்தியர்களில் 69 சதவீதத்திற்கு மேற்பட்டோர் மனிதக் குரலும், ஏஐ உருவாக்கிய குரலும் எது எனத் தெளிவாக பிரிக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சூழலில், தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பணம் தொடர்பான மெசேஜ்களோ, காற்களோ வந்தால் – முதலில் அந்த நபரை நேரடியாக வீடியோ கால் மூலம் உறுதி செய்த பிறகே பணம் அனுப்புமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
எனவே இனி ஒருபோதும் தெரியாத நம்பரில் இருந்து கால் வந்தவுடன் உடனே ‘ஹலோ’ என்று சொல்லுவதற்கு பதில், முதலில் நம்பரை சரிபார்த்து, யார் பேசுகிறார்கள் என்பதைத் தெளிவாக அறிந்த பிறகே உரையாட ஆரம்பிப்பது பாதுகாப்பான தேர்வாகும்.
English Summary
People beware Do this before saying hello to unknown numbers Cybercrime experts warn