புத்தாண்டின் முதல் விண்வெளி பயணம்: பி.எஸ்.எல்.வி–சி62 இன்று விண்ணில் பாய்கிறது...!
first space mission new year PSLV C62 launches into space today
ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று (திங்கட்கிழமை) விண்வெளியை நோக்கி சீறிப் பாயவுள்ள பி.எஸ்.எல்.வி–சி62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன், நேற்று காலை துல்லியமாக 10.17 மணிக்கு தொடங்கியது. புத்தாண்டில் இஸ்ரோ மேற்கொள்ளும் முதல் ராக்கெட் ஏவுதல் என்பதால், இந்த நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை 10.17 மணிக்கு பி.எஸ்.எல்.வி–சி62 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ஏவுதல், இந்தியாவின் 2026 விண்வெளி திட்டங்களுக்கு ஒரு முக்கிய தொடக்கமாக கருதப்படுகிறது. இதற்கான தயாரிப்புகளின் அடையாளமாக, 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்றே அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ராக்கெட்டின் மூலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வடிவமைத்த இ.ஓ.எஸ்–என்1 என்ற முதன்மை செயற்கைக்கோள் பூமியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதனுடன், ஸ்பெயின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ எனும் சிறிய சோதனை கருவியும் இணைக்கப்பட்டுள்ளது.இதோடு மட்டுமின்றி, இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் வணிக நிறுவனங்களின் 17 செயற்கைக்கோள்களும் ஒரே நேரத்தில் விண்ணில் ஏவப்படுகின்றன.
இதனால் இந்த ராக்கெட் ஏவுதல் சர்வதேச விண்வெளி சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏவுதலுக்கு முன்பான இறுதிக்கட்ட தொழில்நுட்ப சோதனைகள், பாதுகாப்பு ஆய்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு தீவிரத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
first space mission new year PSLV C62 launches into space today