இன்று இரவு வானில் தோன்றும் 'நீல நிலவு'...! தவறவிடக் கூடாத அரிய வானியல் அதிசயம்...! - எப்போது, எப்படிப் பார்க்கலாம்...?
blue moon that appear sky tonight rare astronomical wonder not to be missed When and how can you see it
வானியல் ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தும் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ இன்று (ஞாயிற்றுக்கிழமை) வானில் தோன்ற உள்ளது. ஆண்டுதோறும் காண முடியாத இந்த அபூர்வ நிகழ்வு, நிலவை ரசிப்பவர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைகிறது.பொதுவாக ஒரு மாதத்தில் ஒரு முழுநிலவு மட்டுமே தோன்றும்.
ஆனால் சில அரிய சூழல்களில் ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவுகள் நிகழும். அவற்றில் இரண்டாவதாக தோன்றும் முழுநிலவே ‘நீல நிலா’ என அழைக்கப்படுகிறது.சந்திரன் பூமியை ஒரு முறை முழுமையாகச் சுற்றி வர சுமார் 29½ நாட்கள் ஆகின்றன. இதன் காரணமாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த அபூர்வ நிகழ்வு நிகழ்கிறது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு முழுநிலவு தோன்றிய நிலையில், இன்று மீண்டும் முழுநிலவு நிகழ்வதால் ‘நீல நிலா’ உருவாகியுள்ளது.‘நீல நிலா’ என்ற பெயரால் பலர் நிலவு நீல நிறத்தில் ஒளிரும் என்று கருதலாம். ஆனால் உண்மையில் இந்த பெயருக்கும் நிலவின் நிறத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வானியல் நிபுணர்கள் விளக்குகின்றனர்.
இது ஒரு வானியல் காலக்கணக்கு அடிப்படையிலான பெயராகும்.எனவே இன்று வானில் தோன்றும் நிலவு வழக்கம்போல வெண்மையும் சாம்பல் கலந்த ஒளிவீச்சுடனும் கம்பீரமாக காட்சியளிக்கும். நிறத்தில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும், அதன் அரிதான நிகழ்வே இதன் சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த விண்வெளி அதிசயத்தை காண எந்த தொலைநோக்கி கருவிகளும் தேவையில்லை. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் வெறும் கண்களாலேயே தெளிவாகக் கண்டு ரசிக்க முடியும்.மேலும், இந்த முழுநிலவு நிகழ்வின் போது சந்திரன் தனது நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியிலிருந்து மிகவும் தொலைவில் இருக்கும் ‘அபோஜி’ என்ற நிலையை அடைகிறது.
இதன் காரணமாக இந்த ஆண்டின் மிகச் சிறிய முழுநிலவாக இது பதிவாகிறது.இதனால் வானியலாளர்கள் இந்த நிலவை ‘மைக்ரோ மூன்’ என்றும் அழைக்கின்றனர். வழக்கமான முழுநிலவுடன் ஒப்பிடும்போது இது சுமார் 5.5 சதவீதம் அளவில் சிறியதாகவும், 10.5 சதவீதம் குறைவான ஒளிர்வைக் கொண்டதாகவும் இருக்கும். இருப்பினும் இந்த வேறுபாடு வெறும் கண்களுக்கு எளிதில் புலப்படாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய காலண்டர் அடிப்படையிலான நீல நிலா நிகழ்வுகள் சராசரியாக இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்வதால், வானியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு, 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மற்றும் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நீல நிலா காட்சியளித்தது.
இதன் பின்னர் அடுத்த நீல நிலா நிகழ்வு 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிகழும் என்றும், அதனைத் தொடர்ந்து 2029-ஆம் ஆண்டிலும் மீண்டும் இந்த அரிய வானியல் நிகழ்வை காண வாய்ப்பு இருப்பதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
வானில் ஒவ்வொரு நாளும் தோன்றும் நிலவுக்கே தனி அழகு உண்டு. ஆனால் இன்று தோன்றும் ‘நீல நிலா’ அதன் அரிதான வருகையால் வானியல் உலகின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது.
English Summary
blue moon that appear sky tonight rare astronomical wonder not to be missed When and how can you see it