சீருடையைத் திருடி போலீஸான வாலிபர் - சென்னையில் பயங்கரம்.!
youth arrested for steal police uniform in chennai
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் ரெட்டி தெரு சந்திப்பில் இன்று அதிகாலை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசார் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அதில், அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸார் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/crime kjsd-zy8zv.png)
ஆனால், போலீஸார் வாகனத்தை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் திடீரென காவல் நிலையம் பக்கத்தில் உள்ள காவலர் ஓய்வு அறைக்கு சென்று அங்கிருந்த காவலர் சீருடை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றார்.
பின்னர் அவர் ரெட்டி தெரு அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு காவலர் உடையை அணிந்து கொண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை வழிமறித்து பணம் கேட்டு வசூலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
![](https://img.seithipunal.com/media/crime 11-eyq4k.png)
அந்தத் தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் அந்த வாலிபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர் விருகம்பாக்கம் பாண்டியன் தெருவைச் சேர்ந்த குபேந்திரன் என்பதும் காவல் நிலையத்தில் இருந்து காவலர் உடையை திருடிச் சென்று வசூலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குபேந்திரனை கைது செய்தனர். மேலும், குபேந்திரன் மதுபோதையில் இருந்ததால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth arrested for steal police uniform in chennai